districts

சென்னை முக்கிய செய்திகள்

ஒன்றிய பட்ஜெட்: பம்ப் உற்பத்தியாளர்கள் கருத்து

சென்னை, பிப்.3- இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐபிஎம்ஏ), 2025-26-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளது..   இந்த முறை பட்ஜெட் அறிவிப்புகள் பம்ப் உற்பத்தித் துறைக்கு முக்கியமான பலன்களை வழங்கும் என்று ஐ.பி.எம்.ஏ. அமைப்பின் தலைவர் கே.வி. கார்த்திக், கூறியுள்ளார்.  “விவசாயம், நீர் கட்டமைப்பு மற்றும் உள்ளூர் தொழில்துறை மேம்பாட்டில் அரசின் வலுவான கவனம், இந்திய பம்ப் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  “விவசாயி் கடன் ரூ. 2 லட்சம் அதிகரிப்பு விவசாய பம்புகளுக்கான தேவையை உயர்த்தும். விவசாயிகளுக்கும், தொழில்துறைக்கும் பலனளிக்கும். ஜல்ஜீவன் மிஷன் 2028 வரை நீட்டிப்பு, நீர் அணுகலை உறுதி செய்யும், தொடர்ச்சியான வணிக வாய்ப்புகளை உருவாக்கும்” என்று கார்த்திக் கூறினார் அதிக முதலீடுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் முக்கிய துறைகளில் அதிக வளர்ச்சியை  தங்களது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

சென்னை, திருவாரூர் உள்ளிட்ட  6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

சென்னை, பிப். 3- சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திங்களன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.அண்மையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் சோதனையில் இறங்கினர். அதேபோல் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை திருமணம் செய்தவர் கைது

கிருஷ்ணகிரி,பிப்.3-ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது சங்கர் அப்பகுதியில் உள்ள சிறு தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவர் சூளகிரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சிகரலப்பள்ளி நாகம்மா கோவிலில்  திருமணம் செய்தார். இது குறித்து சூளகிரி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜெயம்மா ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் இளம்வயது திருமண தடை சட்ட பிரிவின் கீழ் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கிருஷ்ணகிரி,பிப்.3 - ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாவாடரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னபையன் என்கிற முனியப்பாவுக்கு (62 வயது) மனைவி கோவிந்தம்மாள்,ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். ஞாயிறன்று இரவு தன்தோட்டத்திற்கு  முனியப்பா காவலுக்கு சென்றுள்ளார்.   திங்களன்று காலை வீட்டுக்கு திரும்பி யுள்ளார்.அப்போது எதிரே வந்த யானை ஒன்று அவரை விடாமல் துரத்தி தாக்கி தூக்கி வீசியதுடன் 10 மீட்டர் தூரம் தரத்தரவென இழுத்து சென்றுள்ளது. முனியப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டியடிக்கமுயற்சித்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முனியப்பாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். யானை தாக்கி உயி ரிழந்த முனியப்பா குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும் என கெலமங்கலம் சிபிஎம்  ஒன்றிய குழு  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மாநகராட்சி பள்ளியில் உள்கட்டுமான  வசதியை மேம்படுத்துக  கிருஷ்ணகிரி மேயரிடம் மனு

கிருஷ்ணகிரி,பிப்.3 - காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து எழுத டேபிள், பெஞ்ச் அமைத்து தர வேண்டும் என ஓசூர் மேயரிடம் பள்ளி நிர்வாகம் மனு அளித்துள்ளது. ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யில் 1225 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்திருந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு 15 வது நிதிக்குழு திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்தாண்டு ரூ.1.20 கோடியில் தரைதளம்,முதல் தளம் சேர்த்து 8 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இப்பணிக்காக கட்டுமான பொருட்களை கொண்டு வர பள்ளி சுற்றுச்சுவர் கொஞ்சம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில் வாசல் கதவு அமைத்து தர வேண்டும் என அப்போதே பள்ளி மேலாண்மை குழுவால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஓசூர் மாநகர  மேயர் எஸ்.ஏ.சத்யா பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய வந்தார். அப்போது இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் பகுதியில் வாசல் போல் இரும்புக் கம்பி கதவுகள் அமைத்து தர வேண்டும்,பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவரை சீர்படுத்தி போதிய கழிவறைகள் கட்டித்தர வேண்டும் எனவும்  பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி, ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மேயர் சத்யாவிடம் மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மேயர் சத்யா கூறினார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் 26ஆம் ஆண்டு தின விழா

கிருஷ்ணகிரி, பிப்.3- காவேரி மருத்துவமனை குழுமம் தொடங்கி 26 ஆண்டுகள் கடந்த தின விழாவையொட்டி வெல்னெஸ் ஆன் வீல்ஸ் நவீன மருத்துவ பரிசோதனை வாக னத்தை தொடக்கி வைக்கப்பட்டது.   இந்த வாகனம் தொழில் நிறுவனங்களின் இடத்திற்கு நேரடியாக சென்று பணியாளர்க ளின் முழு உடலையும் பரிசோதனை செய்யும் வசதி கொண்டுள்ளது.இதனை ஏத்தர் எனர்ஜி கார்ப்பரேட் இயக்குநர் ஸ்ரீகாந்த் விஸ்வேஸ்வரன்,பாரத் பிரிட்ஸ் வார்னர் வீட் துணை தலைவர் மரியா சகாயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மருத்துவ மனை ஊழியர் பிந்து வரவேற்க, ஓசூர் கிளை இயக்கு நர் அரவிந்தன், காவேரி மருத்துவமனை குழுமத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் விஜயபாஸ்கரன், துணை நிர்வாகி மருத்துவர் ஸ்ரீராமஜெயம், மூத்த பொது  மேலாளர் ஜோஸ் வர்கீஸ் ஜாய் கலந்து கொண்டனர்.

விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மண்டல இணை இயக்குநர் உறுதி

ராணிப்பேட்டை, பிப்.3 – ராணிப்பேட்டை மாவட்டம், ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை (பி ஏ) ஆங்கிலம் துறை 2 ஆம் ஆண்டு பயின்று வரும் தீபக் என்ற மாணவரை புதனன்று (ஜன.29) ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் சாமுவேல் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வியாழன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  மாணவர்கள் தொடர் போராட்டத்தால் காவல்துறை தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மண்டல இணை இயக்குநர் மற்றும் வட்டாட்சியர் மாணவர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் துறை ரீதியான விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மண்டல இணை இயக்குநர் உறுதி அளித்ததன் பேரில் மாலை வரை நீடித்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக மாணவர்கள் கலைந்து சென்றனர்.  இதில் இந்திய மாணவர் சங்கம் மாநில இணை செயலாளர் பாரதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் சிவராமகிருஷ்ணன், அப்பு, தமிழ்வாணன், சாணக்கிய ராஜ், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் மாநில துணைத் தலைவர் பிரகாஷ், தென்சென்னை  மாவட்ட நிர்வாகிகள்  மணிகண்டன்,  கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிதிலமடைந்த ஆதிதிராவிடர் வீடுகளை  சீரமைக்க நிதியுதவி வழங்குக புதுச்சேரி சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, பிப்.3- புதிய வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானிய தொகையை புதுச்சேரிஅரசு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  காரைக்காலில் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் பழனிவேலு  தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி கலந்து கொண்டு எதிர்கால வேலைகள் குறித்து பேசினார். காரைக்கால் மாவட்ட செயலாளர்  தமீம்அன்சாரி, மாவட்ட குழு உறுப்பினர்கள்  பிரேம்குமார், ராஜேந்திரன்,துரைசாமி, தமிழரசி, பிரகாஷ் மற்றும் கிளை செயலாளர்கள் அப்துல்அஜீஸ், ராதாகிருஷ்ணன், ராஜன், அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தீர்மானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணை மானியம் வழங்கப்பட்டு வீடு கட்டுமான பணியினை முடித்துள்ள பயனாளிகளுக்கு ,இரண்டாவது தவணைத் தொகை இன்னமும் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. கட்டுமான பொருட்கள் விலை வாசி உயர்ந்து வருவதை கவனத்தில் கொண்டு இரண்டாவது தவணை தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக ரூ.20ஆயிரம், ரூ.40ஆயிரம், ஒரு லட்சம் என அரசிடம் மானியம் பெற்று கல்வீடு கட்டிக் கொண்டுள்ள பயனாளர்கள் வீடுகள் சிதைந்து சேதமடைந்து உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு   தற்போது புதிய வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் ரூ.5.5 லட்சம் மானிய தொகையை புதுச்சேரிஅரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்க வேண்டும் என  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, பிப்.3  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட ப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சராக இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் வருமானத் துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் திங்களன்று  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசார ணையை பிப்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி.வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.

தங்கத்தின் விலைகுறைந்தது

சென்னை,பிப்.3- தங்கம் விலை திங்க ளன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7705-க்கும், ஒரு சவர னுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.107 க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,07,000 விற்பனை செய்யப்பட்டது.