districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, டிச.21 - ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கம் செவ்வாயன்று (டிச.20) சென்னையில் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கில், ஒன்றிய அரசு  அறிவித்தபடி 1.7.2022 முதல் 4 விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு 85 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி நிலுவையை வழங்க  வேண்டும், மின்வாரிய ஓய்வூதியர்களின் ஓய்வூதி யத்தை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், போக்குவரத்து, மின்வாரியம், சென்னை மெட்ரோ வாட்டர் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், ஒன்றிய அரசை போன்றே மாநில அரசும் மருத்துவப் படியாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை தலைவர்கள் வலியுறுத்தி பேசினர். கூட்டமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கை அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன பொதுச்செயலாளர் நெ.இல.சீதரன் தொடங்கி வைத்து பேசினார். கூட்டமைப்பின் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஏ.முத்துக்குமார் மற்றும்  பி.எஸ்.அப்பர் (தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்),  வரதராஜன், கு.வீரராகவன் (போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு),  கே.நடராஜன் (மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு), கு.பூபாலன் (ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம்), என்.பரமசந்திரன் (மெட்ரோ வாட்டர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு) உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்  செயலாளர் எஸ்.ஜெகதீசன் நிறைவுரை யாற்றினார்.