சென்னை, அக். 28- வட சென்னையில் உள்ள காசி மேடு மீன்பிடித் துறைமுகத்தை சர்வ தேச தரத்தில் நவீனப்படுத்த ஒன்றிய அரசு முதற்கட்டமாக ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 முக்கிய மீன் பிடி துறைமுகங்களில் ஒன்று வட சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள மிகப்பெரிய காசிமேடு துறைமுகம். வார விடுமுறை நாட்களில் மீன் பிரியர்கள் இங்கு அலை மோதுவதை காண முடியும். இங்கு தினசரி 200 டன் மீன்கள் கொண்டுவரப்படுகிறது. இந்த மீன்களை வாங்க சில்லரை வணிகர்கள், மொத்த வியாபாரிகள் முதல் பொதுமக்கள் என அனைவரும் வருவார்கள். 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காசிமேடு துறை முகத்தில் இருந்து சென்னை திரு வள்ளூர் மற்றும் செங்கல்பட்டு கடல் பகுதியிலிருந்து மீனவர்கள் சுமார் 750 படகுகள் மூலம் தினசரி மீன் பிடித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் இரண்டு பெரிய ஏற்றுமதி சார்ந்த மீன் பதப்படுத்தும் இடமாக இருக்கிறது. இந்நிலையில் காசிமேடு மீன் பிடித்துறை முகத்தில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணி களை செய்து தர வேண்டும், காசி மேடு மீன்பிடி துறைமுகத்தை மீன்வளப் பூங்காவாக அறிவிக்க வேண்டும்,
உலகத் தரம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகமாக மாற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் காசிமேடு மீனவர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில், ஒன்றிய அரசு காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கி பணிகளைத் துவங்க உத்தர விட்டுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மேம்பாட்டு பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாகவும், மொத்தம் ரூ127 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள தாகவும் தெரிகிறது. மேலும் 25க்கும் மேற்பட்ட பணிகளை அடுத்த மாதங்களில் துவங்க ஒன்றிய அரசு முதல் கட்டமாக ரூ98 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக அறக்கட்டளை தலைவர் சுனில் பாலி கூறியதாவது, மீன்பிடித் துறைமுக மேலாண்மை குழுவின் நிதியிலிருந்து இந்த தொகை பெறப்பட உள்ளது. 6 பேக்கேஜ்களாக பிரிக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் ஜனவரியில் தொடங்கும் முழு திட்டமும் ஜூன் 2025க்குள் முடிவடையும். காசிமேடு துறைமுகத்தை சர்வதேச தரத்தில் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்கு கூடுதல் மீன் இறங்கு தளங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட மீன் கையாளும் வளாகம், கப்பல் லிப்ட் படகு பழுது பார்க்கும் வசதி, பேக்கேஜிங் மற்றும் குளிர்பதனக் கிடங்கு, சுத்தம் செய்யும் வசதி, சுகாதார வளாகம் மற்றும் படகுகள் சரியாக நுழையவும் வெளியேறவும் கூடிய சுற்றுச்சுவர், அடிப்படை வசதிகளான தரமான குடிநீர், சிறப்பான கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் காசிமேடு துறைமுகம் மீனவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.