கும்பகோணம், ஜூன் 17-
தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டக் குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய கருப்பு கிரயத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் தனக்காக விவசாயிகளின் பெயரில் வாங்கிய கடனை கட்ட வேண்டும். விவசாய கரும்பு கிரயத்தில் வங்கி கடனுக்காக பிடித்த தொகையை செலுத்த வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தில் விவசாயிகள் வாங்கிய கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. இத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த மாநில அரசு விலை லாபத்தில் பங்கு (5ஏ) வழங்க வேண்டும். மக்களின் நிலத்தடி நீர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சாராய ஆலையை அரசு அனுமதிக்க கூடாது. நிலுவையில் உள்ள கரும்பு வெட்டுக் கூலி, வாகன வாடகை முழுவதையும் வழங்கிட வேண்டும்
உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 200வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநிலச் செயலா ளர் தங்க.காசிநாதன் தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் துரைராஜன், காவிரி பாசன விவசாய பாதுகாப்பு சங்கம் ரா.முருகன், மாநிலச் செயலா ளர் சுந்தர விமலநாதன், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் குமார், மாவட்ட செயலாளர் எம்.வி. கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பழ.அன்புமணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் நிறை வுரையாற்றினார். போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து பிரிவு விவசாய சங்கங்கள், மத்திய தொழிற்சங்கங்கள் (சிஐடியு) அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்தனர்.
கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருமண்டக்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 2022 நவம்பர் 30 முதல் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி, 2023 ஜூன் 17 அன்றுடன் 200-வது நாளாக நடைபெற்று வருகிறது.
திருமண்டக்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை, கடலூர் மாவட்டம் சித்தூரில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைகள் தேசிய கடன் நிறுவன தீர்ப்பாயத்திற்கு சென்று விட்டது (NCLT). அப்போது 1500 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சர்க்கரை ஆலைகளை, கால்ஸ் டிஸ்லரி என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.145 கோடிக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டது.
விற்று வந்த பணத்தில் இருந்து விவசாயிகளுக்கு கரும்பு பண பாக்கியில் ரூ.45 கோடி மட்டுமே தருவதாக என்சிஎல்டி உத்தரவு பிறப்பித்ததை ஏற்காமல் கரும்பு பண பாக்கி முழுவதையும் வட்டியுடன் தர வேண்டும். ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் மோசடியாக பெற்ற 130 கோடி ரூபாய் கடனை விவசாயிகள் பெயரில் இருந்து மாற்றி விவசாயிகளுக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும். 2013 முதல் 2018 வரை விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர் கடன் சுமார் 30 கோடி ரூபாயை திருஆரூரான் ஆலை நிர்வாகம் விவசாயிகளின் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்தது. ஆனால் பிடித்தம் செய்த பணத்தை வங்கிகளுக்கு செலுத்தவில்லை. இந்த கடனிலிருந்து டெல்டா மாவட்ட கரும்பு விவசாயிகளை விடுவிக்க வேண்டும்.
இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பலமுறை பேசப்பட்டது. அப்போதும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, கடந்த மே 8 அன்று தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனவும், திருஆரூரான் சர்க்கரை ஆலையை மாநில அரசே ஏற்று நடத்தி கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் சிபிஎம் சட்டமன்றக் குழு தலைவர் நாகைமாலி, கரும்பு விவசாயிகளின் இப்பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேசியபோது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மாநில முதலமைச்சர், இதில் உடனடியாக தலையிட்டு வழிகாட்ட வேண்டுகிறோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.