திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பியது
திருவள்ளூர், டிச 1- வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், திருவள்ளூர், எல்லாபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட 14 ஒன்றியங்கள் உள்ளன. இதில் மொத்தம் 581 ஏரிகள் உள்ளன. இவற்றில் 77 ஏரிகள் 100 விழுக்காடு முழுமையாக நிரம்பியுள்ளது. 161 ஏரிகள் 75 விழுக்காடு நிறைந்துள்ளது. 85 ஏரிகள் 50 விழுக்காடு நிறைந்துள்ளது. அதேபோல் மாவட்டத்தில் மொத்தம் 3296 குளம், குட்டைகள் உள்ளன. இவற்றில் 516 குளங்கள் நூறு விழுக்காடு நிறைந்துள்ளது. 706 குளங்கள் 75 விழுக்காடு நிரைந்துள்ளது. 533 குளங்கள் 50 விழுக்காடு நிறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருவாயை இரட்டிப்பாக்க டிஆர்ஏ நிறுவனம் திட்டம்
சென்னை, டிச.1- தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் நிதி ஆண்டு 2026 - 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. இதன் வர்த்தகமானது நிதி ஆண்டு 2023-2024ல் ரூ.300 கோடியிலிருந்து நிதி ஆண்டு 2024-25ல் ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் 2026-27-ல் ரூ.1000 கோடி இலக்கை அடைய பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழகத்தை தொடர்ந்து, புனே சந்தையில் நுழைவதுடன், அடுத்த நிதி ஆண்டுக்குள் பெங்களூரில் தனது இருப்பை மேலும் விரிவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. சென்னை சந்தையில் 2.7 மில்லியன் சதுர அடியில் விற்பனை செய்யக்கூடிய பகுதியைச் சேர்க்கும் மூலம், நகரின் முக்கிய சந்தைகளில் 9 நடப்பு மற்றும் 6 வரவிருக்கும் திட்டங்களுடன் தனது தடத்தை வலுப்படுத்துவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய டிஆர்ஏ நிர்வாக இயக்குநர் ரஞ்ஜீத் ரத்தோட், இந்தியாவில், வீடு வாங்குவது பலருக்குமான ஒரு கனவும், பெருமையும் ஆகும். மேலும் இளம் தலைமுறையினர் இடையே இன்னும் உற்சாகமாக இருக்கிறது. சிறந்த விலை, தரம் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி போன்ற ஒவ்வொரு சிரமத்தையும் தீர்க்க மட்டுமல்லாமல், அழகான மற்றும் காலத்திற்கேற்ப இல்லங்களை வழங்குவதன் மூலம், வீடு வாங்குபவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நாங்கள் பொறுப்பான பங்கு வகிக்க உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
பலத்த காற்றால் வானில் தடுமாறிய விமானம்
சென்னை, டிச.1- பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. மழை தொடர்ந்து பெய்ததால் ஞாயிறன்று அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. புயல் அச்சுறுத்தலின்போது சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஓடுபாதையில் இறங்க முயன்ற விமானம் தடுமாறியது. உடனே சுதாரித்து கொண்ட விமானி விமானத்தை தரையிறக்காமல் மேலே எழுப்பி பறக்க வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மழை,வெள்ள பாதிப்பு: ஒன்றிய அரசு உதவி கோரப்படும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி
புதுச்சேரி, டிச.1- புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உட்பட அனைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒன்றிய அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை (டிச.1) ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செ மீ அளவுக்கு பெய்த மழையே அதிகமான மழை பதிவாகி இருந்தது. தற்போது 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால் நீர் உள் வாங்கவில்லை. அதனால் வாய்க்காலில் நீர் நிரம்பி நகரில் பாய்ந்துள்ளது. மழை விட்டால் தண்ணீர் வடிந்து விடும் என எதிர்பார்க்கிறோம் என்றார். கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உட்பட பல தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசிடம் உதவி கேட்போம். புதுச்சேரியில் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உட்பட அனைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும். புயலால் உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் தரப்படும். அனைத்து துறைகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை: தீவாக மாறிய கிராமங்கள்
கள்ளக்குறிச்சி, டிச.1 - ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10.6 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டி ருப்பதால் மாவட்டம் முழுவதும் மழை நீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ளது விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தீவாக மாறிய கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், நெய்வணை ஊராட்சி நெ. பில்ராம்பட்டு கிராமத்தில் சேஷ நதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், மக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து கொடுத்துள்ளனர். அந்த பாலத்தை எறையூர், வட குரும்பூர், தேன்குணம், கூவாடு, நெய்வணை, எதலவாடி, கிள்ளியூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்த கனமழையால் வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால், இந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த சாலை மார்க்க மாக உளுந்தூர்பேட்டையில் இருந்து காட்டு எடையார், காட்டுச் செல்லூர், கல் சிறுநாகலூர், ஸ்ரீதேவி, வட குரும்பூர், எறையூர் பாளையம், கூவாடு உள்ளிட்ட கிராமங்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. பாலம் கட்டும் பணி 8 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்
திருவண்ணாமலை, டிச.1- திருவண்ணாமலை மாவட்டத்தில், புயல் மற்றும் கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த நாச்சி பட்டு, வேங்கிக்கால், அவலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை ஆகிய பகுதி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. செங்கம் அடுத்த படி அக்ரஹாரம், வேடியப்பன் நகர் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் மகன் லோகேஷ் (வயது 4) வீட்டின் பின்புறம் இயற்கை உபாதைக்காக சென்ற போது, ஓடையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை மழை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை சாத்தனூர் அணை, செண்பகத் தோப்பு அணை, மிருகண்ட அணை, குப்பநத்தம் அணையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. சாத்தனூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் உபரிநீரி திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த பள்ளியம்பட்டு கிராம சாலையில் இடி தாக்கியதில், தார் சாலை சேதமடைந்துள்ளது. திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்காவில் மரம் வேருடன் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகரத்தில் மழை நீருடன் கழிவுநீர் கலப்பு
விழுப்புரம், டிச.1- பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் விழுப்புரம் நக ராட்சிக்குட்பட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர், ஷர்மிளா நகர், ராஜகோபால் நகர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் அருகில் உள்ள காலியிடங்களிலும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் பல மாதங்களாக கழிவுநீர், மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. தற்போது நகரின் பல பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரை மற்றும் மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று விடுமுறை விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் திங்கட்கிழமை டிசம்பர் 2 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். சீரமைப்பு பணிக்கு வெளிமாவட்ட மின் ஊழியர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வு மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை சீர் செய்திடும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மின் பாதிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை சீர் செய்ய முதல்வரின் உத்தரவின் பேரில் வர உள்ளார்கள் என்றார். மாவட்டத்தில், கனமழை காரண மாக 11 இடங்களில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 51 இடங்களில் மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 23 மரங்கள் விழுந்து. இதில் 18 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். 21 புயல் பாதுகாப்பு மையங்க ளில் 1,281 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மேலும் சில முகாம்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக செஞ்சி வட்டத்தில் 43 பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே, மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த சிபிஎம் கோரிக்கை விழுப்புரம் மாவட்டத்தை புரட்டிப்போட்ட பெஞ்சல் புயல்-மழையால் திண்டிவனம், செஞ்சி, மயிலம், மரக்காணம், வானூர் வட்டாரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.