புயல் கடக்கும்போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை
சென்னை, டிச. 2- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5 ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் முதல் கடலூர் உள்ள கடலோர மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, அரியலூர், டெல்டா பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும். இதனால் மிக்ஜாம் புயல் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் இவற்றை கடைபிடிப்பது நல்லது. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று விடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. அப்பகுதிகளில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் இதுபோன்ற செயல்கள் ஆபத்தாக அமையலாம். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால் அதை உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது. காற்றின் அழுத்தத்தால் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஆகியவற்றை பயன்படுத்தி ஜன்னலை மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும். சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் வீடு இருந்தால், அப்பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வது நல்லது. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம். எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வெர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து களை ஓரிரு நாட்களுக்கு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவசர உதவிக்காக அரசு அறி வித்துள்ள எண்களை குறித்து வைத்து கொள்ளுங்கள். வீட்டிலோ அல்லது நீங்கள் இருக்கும் பகுதிகளில் மழை காரணமாக விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் தென்பட்டால் உடனடியாக அப்பகுதிக்கு அரசு அறிவித்த அவசர எண்களுக்கு தகவல் தெரிவிக்கவும். மழை நீரில் மூழ்காதவாறு வாகனங்களை பாதுகாப்பாக வைக்கவும். பலத்த மழை தாக்கும்போது மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்கவும்.
சென்னையில் இன்று சர்வதேச ஹோமியோபதி மாநாடு
சென்னை,டிச.3 சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் ஞாயிறன்று (டிச. 3) சர்வதேச ஹோமியோபதி மாநாடு நடைபெறவுள்ளது. சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை, விஞ்ஞான் பிரசார் பாரதி அமைப்புகள் இணைந்து ‘மெடிசினா பியூச்சரா’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டை நடத்தவுள்ளன. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் 2023 மற்றும் 24ம் ஆண்டுக்கான ஹோமியோபதி அறிவியல் மாநாடு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மாநாடு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், ஆலோசகர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மருத்துவ அமைப்புகள், மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் ஹோமியோபதி கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குறித்த கூட்டு விவாதமும், ஹோமியோபதியில் சமீபத்திய ஆராய்ச்சி முன்னேற்றங்கள், ஹோமியோபதி மூலம் அதிக சாத்தியமான தீர்வுகள், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவத்தில் ஹோமியோபதியின் பங்களிப்பு, பொது சுகாதார முயற்சியில் ஹோமியோபதியின் பங்களிப்பு, ஆகிய தலைப்புகளில் பலதரப்பட்ட துறைசார் வல்லுனர்களின் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. மாநாட்டில் ஹோமியோபதி துறையில் சிறந்து விளங்கிய பல்வேறு வல்லுநர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர். தேசிய ஹோமியோபதி கமிஷன் தலைவர் டாக்டர் அனில் குரானா, இந்திய அரசின் ஆயுஷ் நிபுணர் குழு காப்பீட்டுத் துறையின் தலைவரும் மற்றும் சர்வதேச நுகர்வோர் கொள்கை நிபுணருமான பேராசிரியர் பெஜோன் மிஸ்ரா, ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
ரூ.47 ஆயிரத்தை கடந்தது தங்கம்
சென்னை, டிச.2- சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சனிக்கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து ரூ. 47,000யைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, டிச. 2- புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், புயல் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்களன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறி வித்துள்ளார். 5 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பொன்னேரி மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 50 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் புயலை எதிர்கொள்ள 400 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோரும் டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
கறவை மாடுகள் வழங்க குழு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி, டிச.2 - பால் உற்பத்தியாளர்களை கொண்டு குழு அமைத்து புதிதாக கறவை மாடுகள் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் இணைக்கப் பட்டுள்ள புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரகு.அன்புமணி, பொதுச் செயலாளர் எஸ். பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது:- புதுச்சேரி அரசு பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் கால்நடை துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் கறவை மாடுகள் 50 விழுக்காடு மானியத்துடன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் கடந்த சில வருடங்க ளாக உண்மையான உற்பத்தியாளர்கள் பயனடைய வில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு புதுவை அரசு 50 விழுக்காடு மானியத்தில் கறவை மாடுகளும், ஆடுகளும் வழங்கப் பட்டது. அதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப் பட்டது. இதில் உண்மையான பால் உற்பத்தி யாளர்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படவில்லை. இதில் அரசியல்வாதிகள் கைவரிசை யால் வசதி படைத்தவர்களுக்கு, பதவியில் உள்ளவர்களின் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவு மானிய தொகையை ‘ஆட்டைபோட்டனர்’. இதனால், புதுவையின் பால் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு 1,600 கறவை பசுமாடு கள் வாங்குவதற்காக ஒரு கறவை பசு மாடு விலை ரூ.50 ஆயிரம் என ரூ.4 கோடியை அரசு ஒதுக்கி இருக்கிறது. ஒரு பசு மாட்டுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலைமை என்னவென்றால்? ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு 30 முதல் 40 மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை போலவே உண்மையான உற்பத்தியாளர் கள் பயனடைய வழி வகை செய்யாது. மாடுகளை வாங்காமல் மானியத்தை ‘ஏப்பம்’ விடுகிற ஏற்பாடாகும். இதன் மூலம் எந்த நோக்கத்திற்காக அரசு கறவை மாடுகள் வழங்குகிறதோ? அது முற்றிலும் அழிக்கப் படுகிறது. எனவே, இந்த திட்டத்தை ஊழல் இல்லா மல் அமல்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மூலம் 103 கிராம பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிதாக மாடு வாங்காமல் ஏற்கெனவே வைத்திருக்கும் மாட்டையே காட்டி கடன் பெறும் ஏற்பாடுகளை முற்றிலும் ஒழித்து, 40 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று மாடு பிடிக்க வேண்டும். கிராம பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் அல்லது உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
குள்ளஞ்சாவடி அருகே நகைக்காக பெண் படுகொலை
கடலூர்,டிச.2- கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சம்மட்டி குப்பத்தை சேர்ந்த மகாலட்சுமி (55) தனது ஆடுகளை அதே பகுதியில் உள்ள பள்ளத்து ஏரி அருகில் மேய்ப்பது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக மகாலட்சுமி வீட்டில் இருந்து சென்றார். இந்த நிலையில் பள்ளத்து ஏரி அருகில் காதில் காயங்களுடன் அவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே குள்ளஞ்சாவடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், விசாரணை நடத்தினர். ஆடு மேய்த்து கொண்டிருந்த மகாலட்சுமியின் காதை அறுத்து கம்மல், கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த தங்க தாலி, கொலுசு ஆகியவற்றை விட்டு கொண்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டையில் போலி மருத்துவர் கைது
கடலூர்,டிச.2- பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களுக்கு ராஜசேகர் என்பவர் மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதாக பண்ருட்டி அரசு தலைமை மருத்துவர் மாலினிக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் மருத்துவ குழுவினருடன் சென்று பார்த்தபோது புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் அருகில் மருத்துவம் படிக்காமல் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை மருத்துவர் மாலினி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் ராஜசேகரை (66) கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னையில் டிச. 20 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் புள்ளியியல் அலுவலர் சங்கம் முடிவு
கடலூர், டிச.2- சென்னையில் இம்மாதம் 20 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பால் ெஜயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், புதிய வருவாய் கோட்டங்களின் பணியிடங்களை உடனடியாக உருவாக்க வேண்டும். கடந்த மூன்று வெளியிடப்படாமல் உள்ள பதவி உயர்வுக்கான புள்ளியியல் உதவி இயக்குநர் குழு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அரசு துறை மற்றும் சங்கம் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு கூட்டம் நடத்தி துறையில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 4 முதல் தேதி 7 ஆம் தேதி வரை ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்றும், 8 ஆம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்றும் 20 ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.