கடலூர், ஜன.19- கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தில் தானே புயலின் தாக்கத்தில் சிதிலமடைந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ள சமுதாய நலக்கூடம் இதுவரையில் சீரமைக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. 2011-ம் ஆண்டு தென்கிழக்கு வங்கக் கடலில் தானே புயல் தீவிர புயலாக வீசியது இப்புயல் மணிக்கு 140 கி மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்து, கடலூர் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. 2011 டிசம்பர் 30ஆம் தேதி வீசிய புயலின் காரணமாக கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் பலியாகினர். லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாயந்தன, வீடுகள், விலை நிலங்கள் சேதமாகின, மின் கட்டமைப்பு அடியோடு புரட்டி போட்டன. மின்சாரம் வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாகியது. புனரமைப்பு பணிக்காக தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய்களை செலவிட்டது. புயல் கரையை கடந்த திருச்சோழபுரத்திற்கு அருகே தியாகவல்லி கிராமம் உள்ளது. கடல் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலும்,சட்டமன்ற தொகுதி குள்ளும், கடலூர் வட்டத்திற்குள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்தப் புயலின் காரணமாக சமுதாய நலக்கூடத்தில் இருந்த மின்விசிறிகள் அனைத்தும் பழுதடைந்து சின்னாபின்னமானது. கதவுகள் ஜன்னல்கள் முழுவதுமாக உடைந்தன. சமுதாய நலக்கூடத்தில் இருந்த மின்சார சாதனங்கள் முழுவதுமாக சிதைந்து போயின. தற்போது பயனற்று பாழடைந்த பங்களாவாக உள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தானே புயலின் கோரத் தாண்டவத்தின் காட்சி பொருளாக சமுதாய நலக்கூடம் காட்சியளிக்கிறது. இதுவரையில் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடாமலும், அதனை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபடாமலும் உள்ளனர். தியாகவல்லி ஊராட்சியில் கன்னிக் கோவில் அருகே உள்ள இந்த சமுதாயக்கூடத்தை மறு சீரமைப்பு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்பதே அந்த கிராம மக்களின் கோரிக்கையாகும். - வ.சிவபாலன்