சென்னை விமானநிலையத்தில் 2.40 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை, ஜூலை 24- குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திங்களன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணி களை நிறுத்தி, பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது பீர் (38) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்று விட்டு, மறுநாளே குவைத்தில் இருந்து, சென்னைக்கு திரும்பி வந்தார். அந்த பயணியின் பெல்ட்டுக்குள் இருந்து 2.4 கிலோ எடையுள்ள ஒரே தங்க கட்டியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி னர். அந்த தங்க கட்டி 24 கேரட் தங்கம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.57 கோடி. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர். அதில் ஷேக் முகமது பீர், கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. எனவே இவரை இந்த கடத்தலுக்காக, குவைத் நாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அனுப்பி வைத்த கடத்தல் ஆசாமி யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சலுகை விலையில் ஐக்யூஓஓ செல்பேசி விற்பனை துவக்கம்
சென்னை, ஜூலை 24- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம், தனது இசட் மாடல் வரிசையில் புதிதாக ஐக்யூஓஓ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் சக்திவாய்ந்த புராசசர், நட்சத்திர வடிவமைப்பு மற்றும் சோனி முதன்மை கேமராவுடன் முதல் முறையாக 5G பயனர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் கூடிய ரூ.10,499 ரூபாய் விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சலுகை விலையில் 9,999 ரூபாய்க்கும், 11,499 ரூபாய் விலை கொண்ட 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 10,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மேலும் 6ஜிபி-ல் இருந்து ரேமை நீட்டித்துக் கொள்ளும் வசதியுடனும் மெமரி கார்டை 1டிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது..
பாகற்காய் விலை உயர்வு
சென்னை,ஜூலை 24- சென்னையில் ஒரு கிலோ பீன்ஸ் விலை 35 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, பாகற்காய் விலை 30 ரூபாயில் இருந்து 225 ரூபாய்க்கு வந்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 75 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் 25 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ எலுமிச்சை 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ குடை மிளகாய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளிம்பு நிலை சிறுபான்மையினருக்கு பட்டா கேட்டு முற்றுகை போராட்டம் சிறுபான்மை மக்கள் நலக்குழு எச்சரிக்கை
திருவண்ணாமலை, ஜூலை 24- திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரப்பகுதியில் வாடகை வீட்டில் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கடந்த 2022 ஆம் ஆண்டு செப் 29 ஆம் தேதி செய்யாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப். 10 ஆம் தேதி மற்றும், அக். 1 ஆம் தேதி செய்யாறு சார் ஆட்சியரிடம், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போதும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், புதனன்று (ஜூலை24) செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா அவர்களிடம் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் யாசர் அராபத், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர் ஷேக் இஸ்மாயில் ஷரிப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ செய்யார் நகர பகுதியில் வாடகை வீட்டில் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசிக்கும் விளிம்பு நிலை இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா விரைவாக வழங்க கோரி, வட்டாட்சியர், சார் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தொடர்ந்து எங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கூலித் தொழிலாளி அடித்துக் கொலை
சென்னை, ஜூலை 24- சென்னை மெரினாவில் உள்ள மாநிலக் கல்லூரி பின்புறம் ரயில்வே பார்டர் சாலையில் புதனன்று காலை பெங்களூருவை சேர்ந்த சுந்தர்(45) கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக்(20) என்ற இளைஞரை கைது செய்தனர்.
ஓசூர் மாநகரில் ஆக்கிரமிப்பை தடுக்க வேலிகள் அமைக்க அரசு முடிவு
கிருஷ்ணகிரி, ஜூலை 24- ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் தலைவர் அசோக் ரெட்டி தலைமையில் ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் முன்னிலையில் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை ஏற்று பெரியார் நகர் பூங்கா உட்பட மாநகராட்சி பூங்காக்கள், தனியார் லே அவுட்களில் அமைக்கப்பட்ட மற்றும் அரசு அங்கீகரித்துள்ள பூங்காக்கள் அனைத்தையும் சீரமைப்பது என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நகரின் மையப் பகுதிகளில் உள்ள ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சி மூலம் வேலி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாநகரில் கடும் நெருக்கடியில் உள்ள பிரதான கடை வீதிகளான நேதாஜி சாலை, மகாத்மா காந்தி சாலை, ஏரி வீதி,வட்ட அலுவலக சாலை,ராம் நகர் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலைகளை விரிவாக்கம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. எம்ஜி.ரோடு கடைவீதியில் நெருக்கடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தனர்.
குடிநீர் பைப் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
கடலூர், ஜூலை 24- கடலூர் திருவந்திபுரம் சாலையில் கே.என்.பேட்டை அருகே புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக புதன்கிழமை காலையில் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது திருவந்திபுரத்தில் இருந்து கடலூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக கடலூர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.