districts

img

சொத்து தகராறில் தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த மகன்

அம்பத்தூர், ஜூலை 11- பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் சொத்து தகராறில் தந்தை மீது வேன் ஏற்றி கொலை செய்த மகனை‌ காவல் துறையினர் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவர் புதன்கிழமை இரவு தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன், ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ராஜேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராஜேந்திரன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து தகராறில் ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (26) தந்தை மீது வேன் ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான வெங்கடேசனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மகனே தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.