districts

img

இருந்தை கிராம மக்கள் போராட்ட அறிவிப்பு கோரிக்கைகளை ஏற்றார் பிடிஓ

கள்ளக்குறிச்சி,ஆக.30 – இருந்தை ஊராட்சி முழுமைக்கும் சுத்தமான குடிநீர் வழங்க புதிய ஆழ்துளை  கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்பன வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்துள்ளார். குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிபிஎம் மற்றும் இருந்தை கிராம பொதுமக்கள் சார்பில் பிடிஓ அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அழைத்துப் பேசினார்.   இதில் இருந்தை உயர்நிலைப்பள்ளி அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க  வரும் திங்கள்கிழமை அதிகாரிகள் பார்வை யிடுவார்கள் எனவும், சட்டவிரோதமாக மோட்டார் வைத்து தண்ணீர் திருடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். இருந்தை அந்தோனியார் கோவில்  தெருவில் 85 மீட்டர் சிமெண்ட் சாலை  அமைக்கப்படும், 100 நாள் வேலை முறை கேட்டில் ஈடுபடும் பணி பொறுப்பாளர்களை மாற்றுவது குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.இருந்தை கிராமத்திற்கு நிரந்தரமாக கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்ய வருவாய் வட்டாட்சிய ருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்றும், இருந்தை ஏரி தோப்பு முதல் ரயிலடி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரயில்வே கேட் இருபுறமும் விவசாய நிலத்திற்கு சாலை அமைத்து தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இருந்தை ஊராட்சியில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக உயர்நீதிமன்ற வழக்கு எண் 13567/2023 ன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.சுப்பிர மணியன், மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ். மோகன், ஜெ.ஜெயக்குமார், கிளை செயலாளர்கள் எஸ். ஆரோக்கியதாஸ், எம்.செல்வி, எம். வீரமணி , வி.ஜெபஸ்டின்,  அந்தோணிசாமி, கஸ்பா, எஸ்.சுமதி,  கே.சரோஜா, அமிர்தம், பாலா, பாத்திமா மேரி, அருள்ராஜ்,மாரியம்மாள், வசந்தா, மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.