புதுச்சேரி, ஜூலை 10- குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26ஆயிரம் நிர்ணயம் செய்யக்கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு போதுமான நிதி வழங்கி, நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், மின்சார துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை ஒருங்கிணைந்து ஜவுளி பூங்கா அமைத்திட வேண்டும். தொழிற்சாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மாறினாலும், தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும், புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனங்களில் பணி செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் சீனுவாசன், நிர்வாகிகள் முருகன், கொளஞ்சியப்பன்,ராமசாமி, மதி வாணன்,தினேஷ் குமார், ராஜ்குமார், மணிபாலன், ரவிச்சந்திரன்,கலியன், விஜய குமார், அமுதா, லாவண்யா, மணவாளன், காளிதாஸ், சூரியன் உள்ளிட்ட இணைக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.