சென்னை,ஆக.13-
சென்னை அடையாறு இந்திரா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை உடனிருந்து கவனிப்பதற்காக அவரது தூரத்து உறவினராக கனகசண்முகம் என்பவரை கடந்த 2 மாதங்களாக வேலையில் அமர்த்தியிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் உடல்நிலை சரியில்லாமல் டாக்டர் கனகராஜ் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 100 சவரன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் உட்பட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தது. இது பற்றி வீட்டில் வேலை செய்த கனகசண்முகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது நகை மற்றும் பணத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அதனை திரும்பி தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மருத்துவரின் மனைவி கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையை மீட்டுத் தருமாறு அடையாறு போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.