சென்னை,அக்.14- தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில அரசின் வருவாய் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் கழிவுநீரகற்று துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. கனமழை எச்சரிக்கை, விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் ஏற்கனவே 3 பேரிடர் குழுக்கள் உள்ள நிலையில், சென்னையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 குழு, கோவையில் 3 குழு, மேட்டுப்பாளையத்தில் 3 குழு சென்னைக்கு வருவதற்கு தயாராக உள்ளது. இது தவிர அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன. இவர்கள் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பருவமழை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தலைமை செயலாளர் உத்தரவு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது அடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார். அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.