காஞ்சிபுரம் டிச. 25 - ஆட்டோவில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 4¾ சவரன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள். காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் வசிப்பவர் மும்தாஜ் (30). இவர் ஒலிமுகம்மது பேட்டையிலிருந்து ஒரு ஆட்டோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்பொழுது மும்தாஜ் அவரது டிராவல்ஸ் பையை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். இந்த டிராவல்ஸ் பையை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் பெரியார் தெருவில் வசிக்கும் ராஜேஷ் (31), உடனடியாக அந்த பையை பெரிய காஞ்சிபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரையிடம் ஒப்படைத்தார். அதில் 4¾ சவரன் தங்க நகை இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் பையை காணவில்லை என்று புகார் செய்த மும்தாஜை காவல் நிலையத்திற்கு வர வைத்தார். அவரிடம் ஆட்டோவில் தவறவிட்ட டிராவல்ஸ் பையை காட்டி இதுதான் உங்கள் பையா? என்று கேட்டார். பின்னர் அதிலிருந்த நகைகளை எடுத்துக் காண்பித்தார். உடனே மும்தாஜ் அது என்னுடைய டிராவல்ஸ் பைதான், என் நகை தான் என்று கூறினார். இதையொட்டி ஆய்வாளர் அண்ணாதுரை அவரிடம் நகையை ஒப்படைத்தார் பின்னர் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவிஆய்வாளர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை வெகுவாக பாராட்டி வெகுமதி அளித்தனர்.