திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகர் 9 -வது வார்டில் 600 வீடுகள் உள்ளன. நேதாஜி நகர் 2 வது வார்டில் 1200 வீடுகள், வெண்மணி நகரில் 400 வீடுகள், கிருஷ்ணா நகரில் 200 வீடுகள், பி.ராமமூர்த்தி நகரில் 100 வீடுகள், எடப்பாளையம் பெரியார் தெரு, எம்ஜிஆர் தெரு என மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் உள்ளன. இங்கு அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். அதிகபட்சமாக 40 ஆண்டுகளும் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலமாகவும் வாழ்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பான்மையாக அரசுக்கு சொந்தமான மேய்கால் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என அரசு ஆவணங்கள் அனைத்தும் இந்த விலாசத்தில் பெற்றுள்ளனர். மேலும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளனர். ஊராட்சிமன்றத்திற்கு வீட்டு வரியையும் முறையாக செலுத்தி வருகின்றனர். தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல முறை விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், இதுவரைக்கும் பட்டா கிடைக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நில உரிமை இழந்துள்ளனர்.
தொடரும் மக்கள் போராட்டம்
கடந்த 2008 ஆம் ஆண்டு, அலமாதி ஊராட்சிமன்றத்திற்கு சொந்தமான பகுதிகள் முழுவதும் பல்வேறு சர்வே எண் கொண்ட குடியிருப்புகளில் வசித்த சுமார் 1000 பேருக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஜீவா நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் தொடர்ந்து பல முறை மனு வழங்கி முறையிட்டனர். அலமாதி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்திலும் தகுதியான அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நகலையும் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
முதலமைச்சருக்கும் மனு
இந்த சூழலில் 2023 ஜூன் மாதத்திலிருந்து வீட்டு வரி வசூலிப்பதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமையில் 2023 ஆக 18 அன்று சோழவரம் பிடிஒ அலுவலகம் சென்று முறையிட்டனர். பிறகு, மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கை மாநாடு இந்த நிலையில், ஜீவா நகர் உள்ளிட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள மக்களுக்கு அனுபவத்தில் உள்ள நிலத்திற்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் 27 ஆம் தேதி ஜீவா நகரில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், ஒன்றியச் செயலாளர் டி.சரளா, ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கர், ஜீவா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் சசிகுமார், நூருல்லா, ரங்கநாதன், சரவணன், சோமசுந்தரம், பிடிசி சுந்தரம், செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பட்டா கேட்டு அடுத்த கட்டமாக வலுவான போராட்டங்களை முன்னெடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தடையை நீக்குக மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கும், சில பகுதிகளில் பெல்ட் ஏரியா என்கிற தடையாணையால் மக்கள் பாதிப்பதால் அந்த தடையை நீக்கி அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும். கணவன் - மனைவி பெயரில் இலவச கூட்டு பட்டா வழங்க வேண்டும், அனுபவத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கும் முழுமையாக பட்டா வழங்க வேண்டும், நில உரிமை பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் பட்டா வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். - பெ.ரூபன்