திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
திருவள்ளூர், ஜூலை 2- 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களை திருவள்ளூர் மாவட்டஆட்சியர் பிரபுசங்கர் தரக்குறைவாக பேசியதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 60 விழுக்காடுட்டிற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளி தலைமை ஆசி ரியர்களை, நீங்கள் எதற்கும் லாயக்கில்லை என்றும், தலைமை ஆசிரியராக நான் இருந்திருந்தால் மாடி மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டி ருப்பேன் என்றும், கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தில் நீங்களே காரி துப்பி கொள்ளுங்கள் என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் என்னை பற்றி யாரிடம் சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. போஸ்டர் அடித்து ஓட்டி னாலும் கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நான் கவலைப்பட போவதில்லை எனவும் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் போராட்டம் வலுப்பெறும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வழக்கறிஞர்களை ஆட்சியர் தரக்குறை வாக பேசியதால் அவர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதும் அதனைத் தொடர்ந்து ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை, ஜூலை 2- அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் மிகவும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே நடத்தப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. விலையையும் உயர்த்தாமல் அதே விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 392 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரத்து 100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலியாக ரூ.300 வரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இது 325 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடசென்னையில் இன்று மின்தடை
சென்னை, ஜூலை 2- வடசென்னையில் புதன்கிழமை (ஜூலை 3) செம்பியம், அம்பத்தூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் செம்பியம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, டி.எச். சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, காவேரி தெரு, காந்தி நகர் தெரு 1 முதல் 4 வரை உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை ஏற்படும். அம்பத்தூர், கோலடி ரோடு, அன்பு நகர், மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் நகர், நொளம்பூர், தேரோடும் வீதி, முகப்பேர் மேற்கு மெயின் ரோடு, கம்பர் சாலை, 3 பிளாக்குகள் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்கவேண்டும் சிஐடியு புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூலை 2- புதுச்சேரி ஏ.எஃப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு புதுச்சேரி மாநில குழு கூட்டம் முதலியார் பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகி கள் முருகன், கொளஞ்சியப்பன். ரவிச்சந்தி ரன், மதிவாணன், ராமசாமி, கலியன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்ட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தொழிலா ளர் சட்டங்களை மாற்றுவதை கைவிட வேண்டும், அனைத்து தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை போதுமான நிதி ஒதுக்கி உடனடியாக செயல்படுத்திட வேண்டும், புதுச்சேரி மின்சாரத் துறையை தனி யாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி ஏ.எப்.டி,சுதேசி, பாரதி பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் அதே ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்ற சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூலை 10அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி, ஜூலை 2- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டுள்ளது. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு ஒன்றிய, மாநில அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்கு http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தேர்வு குழு மற்றும் மாநில தேர்வு குழு இணைந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும். பின்னர் மத்திய தேர்வு குழு பரிசீலனைக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் கால்நடை தீவனம் வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
புதுச்சேரி, ஜூலை 2- கால்நடை தீவனத்திற்கான மானியத்தை ஆண்டு முழுவதும் வழங்கிட வேண்டுமென்று புதுச்சேரி அரசை பால் உற்பத்தியாளர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் இரகு. அன்புமணி, செயலாளர் சீ. பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு, புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த காலங்களில் பசுவின் கறவை காலம் வரை யில் மானிய விலையில் தீவனம் வழங்கி வந்த நிலையில் அதை குறைத்து சில ஆண்டு களாக ஆண்டொன்றுக்கு மூன்று மாதத்திற்கு மட்டும் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மட்டும் 75விழுக்காடு தீவன மானியம் அனைத்து வகுப்பைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இப்பொழுது அதுவும் குறைந்து ஆதிதிரா விடர் வகுப்பை சேர்ந்த பால் உற்பத்தி யாளர்களுக்கு மூன்று மாதம் என்பதை இரண்டு மாதம் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஆனால் மானியம் 75 விழுக்காட்டி லிருந்து 92 விழுக்காடாக உயர்த்தி, மாதத்தை குறைத்து மானிய விழுக்காடு ஏற்றி உள்ளதாக ஏமாற்றுவது மட்டுமல்ல, ஆதி திராவிடர் பால் உற்பத்தியாளர்களை புதுவை அரசு வஞ்சிக்கிறது. மறுபுறம் பின்தங்கிய பால் உற்பத் தியாளர்களுக்கும் மூன்று மாதம் மானியம் என்பதை சுருக்கி ஒரு மாதம் மட்டும் மானியம் என குறைத்தது. அது மட்டுமின்றி 75 விழுக்காட்டில் வழங்கி வந்த மானியத்தை 52 விழுக்காடாக குறைத்துள்ளனர். இவ்விரண்டு நடைமுறைகளும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என்பது பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாரபட்சமான அணுகுமுறையை உடனடியாக திரும்பப்பெறுவதுடன் ஆண்டு முழுவதும் தீவனம் சாப்பிடும் பசுக்கள் ஏதோ வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே சாப்பிடும் என நினைத்து மூன்று மாதம் மட்டுமே மானியம் வழங்கப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும். மேலும் பன்னிரண்டு மாதங்களுக்கும் தீவன மானியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதுவை அரசை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறது ஆனால் புதுவை அரசு இதுகுறித்து செவிசாய்க்கா மல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மானியம் வழங்கி வந்த மாதத்தையும் குறைத்து மானிய விழுக்காட்டையும் குறைத்தது என்பது புதுவையில் தற்போது உள்ள பால் தட்டுப் பாட்டை சரிசெய்ய உதவாது. மாறாக வெளி மாநிலங்களில் இருந்து பாலை கொள்முதல் செய்து அதில் ஆட்சியாளர்களும், அதிகாரி களும் ஊழல் செய்வதற்கே வழிவகுக்கும் என்பதை புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கண்டனத்தை பதிவு செய்கிறது. குறைத்த மானியத்தை ஏற்றித் தரவும் ஆண்டு முழுவதும் மானியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் . இவ்வாறு அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற குடியிருப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கடலூர், ஜூலை 2- கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன் தலைமையில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபனிடம் அளித்த மனுவில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆராய்ச்சிகுப்பம், மாசிலா மணி நகர், பாப்பம்மாள் நகர், தோட்டப்பட்டு ஊராட்சி, குமரப்பன் நகர், கோண்டூர், அழகப்பா நகர், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதி களில் உள்ள பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன அந்த பகுதியில் உடனடியாக புதிய சாலை அமைத்து தர வேண்டும். அதே போல் கோண்டூர், ஆண்டாள் அவென்யூ, பாலாஜி அவென்யூ, மீராகிருஷ்ணா நகர், பழனி ஆண்டவர் சிட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக மின்விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்போர் சங்கத்தின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து படிப்படியாக செய்து தருவ தாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்துள்ளார். கடலூர் அனைத்து குடியிருப் போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மணி, பாஸ்கரன், பாலசுப்ரமணியன், பொன்னுசாமி, மாயகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், அருணகிரி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நாள் விழா இலக்கிய போட்டி
தமிழ்நாடு நாள் விழா இலக்கிய போட்டி ராணிப்பேட்டை, ஜுலை 2 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளி களிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 9 அன்று வாலாசா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் தனித்தனியே நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாண வர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயி ரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் அலுவலகத்தில் நேரிலோ, 0416 - 2256166 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.