திருவண்ணாமலை, ஜன.28- கல்வித் தந்தை சுவாமி சகஜானந்தாவின் 135 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடை பெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு சிபிஎம் செய்யாறு வட்டார செயலாளர் டி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சுவாமி சகஜானந்தா தமிழ்நாட்டில் ஆற்றிய மகத்தான பணிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உரை யாற்றினார். அப்போது, தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் அனைவரும் சென்று வழிபடும் உரிமை வேண்டும் என சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சகஜானந்தர் சட்ட தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அந்த தீர்மானம் சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராத அவர் 10 ஆண்டுகளாக போராடியதன் விளைவாக 1947 ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது என்றார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்டச் செயலாளர் ராமதாஸ், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ரகுபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து, வட்டார செயலாளர்கள் சதீஷ்,அப்துல் காதர், ரமேஷ் பாபு உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.