சென்னை, மார்ச் 22- திருவொற்றியூர் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், உயர்நீதிமன்றம், வேளச்சேரி, கோயம்பேடு போன்ற பல்வேறு இடங்களுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜேட் கூட்டத்தில் திருவொற்றியூர், தாம்பரம் சைதாப்பேட்டை ஆகிய மூன்று பணிமனைகள் ரூ.1,347 கோடி செலவில் மேம்படுத்தபடும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை திட்ட அதிகாரி ரவிக்குமார், கே.பி.சங்கர் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் திருவொற்றியூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது பேருந்துகளை நிறுத்துவதற்கான இடம், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்குவதற்கான அறைகள், பயணிகளுக்கான கழிவறை அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி தெருவிலுள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அஜாக்ஸ் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றை யும் பார்வையிட்டனர்.