கடலூர், அக்.16- கடலூரில் உள்ள மிகப் பெரிய நீர் நிலைகள் கெடிலம் மற்றும் தென் பெண்ணை ஆறு மிக முக்கியமானவை. இந்த ஆறுகள் பல மாவட்டங்களைக் கடந்து கடலூரில் கடலில் கலக்கிறது. இதில், கெடிலம் ஆறு, பாசன ஆறு இருந்தது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு, குப்பைகளை கொட்டுதல் ஆகியவற்றால் மாசடைந்து, சீரழிந்துள்ளது. இந்த ஆற்றின் ஒரு புறம் கடலூர் மாநகர மக்கள் வசிக்கின்றனர். மறுபுறம் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி பாரி சர்க்கரை ஆலை, அதன் கழிவு நீரை பில்லாலி தொட்டி கிராமம் வழியாக சுமார் 50 ஆண்டுகளாக கெடிலம் ஆற்றில் விட்டு, அது கடலில் கலந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன், கெடிலம் ஆற்றின் கம்மியம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.7.50 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின், ரசாயன கழிவு கலந்த தண்ணீரை அங்கு தேங்கி நிற்கிறது. கன மழை மற்றும் பெரு வெள்ளத்தில் இந்த கழிவு நீர் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதும், அதன் பின் கழிவு நீர் தேங்கி, குடிநீர் மாசு அடைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் கம்மியம் பேட்டையில் உள்ள தடுப்பணை நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையின் அபாயகரமான கழிவுகளை தேக்கி வைக்கும் இடமாக மாறிவிட்டது. இந்த தடுப்பணையை சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் கருப்பாக மாறி, குடிப்பதற்கும் கூட பயனற்றதாக மாறி விட்டதாக குடியிருப்போர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது சில நாட்களாக பெய்த மழையால் அதிகளவில் ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படும் கம்மியம்பேட்டை தடுப்பணையில் முழுமையாக வழிந்தோடும் கழிவு நீரால் நுரை தள்ளி காட்சியளிக்கிறது. உடனடியாக நிலத்தடி நீரை மீட்டெடுக்க நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் ஆற்றில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.