districts

செம்பரம்பாக்கம்-கோயம்பேடு 2-வது மெகா குடிநீர் குழாய் பதிப்பு

பூந்தமல்லி,மார்ச் 19- செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகிக்கும் வகையில் 2-வது பெரிய அளவிலான குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியில் மழை நீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து சென்னை நகரில் குடி நீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. எனினும் இது குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.  இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னை நகருக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகிக்கும் வகையில் இந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இது கோயம்பேடு வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.43.75 கோடியில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  குழாய், தேசிய நெடுஞ்சாலை எண்-4, பூந்தமல்லி புறவழிச் சாலையில் தரைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. சுமார் 6 மீட்டர் விட்டம் உடைய இந்த பெரிய குழாய் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தில் அமைகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து அமைக்கப்படும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.