கள்ளக்குறிச்சி, நவ.23 – கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி திட்டம் உள்ளிட்ட குறைதீர்க்க முகாம்களில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் கோரி மனு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணில் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். கல்வி கற்பவர்கள்,சுயதொழில் செய்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் ஆகியோருக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2024-25 ஆம் நிதியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத் திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிக் கோரி விண்ணப்பிக்கும் போது உரிய சான்றிதழ்களுடன், தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்தால் அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.இந்த நேர்காணலில் முட நீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.