வேலூர், அக்.4- இரண்டு மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் புதனன்று (அக்.4) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சியில் 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மாதம் தோறும் ஊதியம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்காத புகார்கள் அடிப்படை யில் தற்போது அந்நிறுவனம் மாற்றப்பட்டு, வேறு ஒரு நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே பணி செய்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை பழைய ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை. இதனை கண்டித்து வேலூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சத்து வாச்சாரி காவல்துறையினர் நடத்திய பேச்சு நடத்தி ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து ஊதியத்தைப் பெற்று தருவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.