சென்னை,ஜூன் 29-
சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளியின் டிஜிபியாக இருந்த சந்தீப் ரத்தோர், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமனம் செய்து தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா வியாழக்கிழமை (ஜூன் 29) உத்தரவிட்டார்.
தில்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் கடந்த 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பொறுப்புக ளில் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளிக்கு அண்மையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், இப்போது சென்னை காவல் துறையின் 109 ஆவது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.