districts

img

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

கும்பகோணம், ஆக.5- கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி நாளொன்றுக்கு ரூ.591 வீதம் சம்பளம் வழங்க வேண்டும் எனக் கோரி சிஐடியு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, துணைச் செயலாளர் அன்பு, கும்பகோணம் ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அளித்தனர். அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றி வரும் இத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.235/- வீதம் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இக்குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களான நாங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் அல்லாடுகிறோம். ஆகவே கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க (ந.க.எண்: 34535 2023 ஜி2/ நாள்: 03.08.2023) நாளொன்றுக்கு ரூ.591/- ஊதியம் வழங்க கோருகிறோம். முன்மாதிரியாக விளங்க வேண்டிய, கும்பகோணம் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஊதியம் வழங்காதது வருத்தமளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நாளொன்றுக்கு ரூ.591/- ஊதியத்தினை பெற்றுத் தர வேண்டுமென” தெரிவிக்கப்பட்டது.