ராணிப்பேட்டை, அக். 4 - ராணிப்பேட்டை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் புதனன்று (அக். 4) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஜிடிஎஸ் அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி ஓய்வூதியம் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரை படி பண பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு 12, 24, 36 வருட பணிக்கு வழங்கி 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ. 5 லட்சம் மற்றும் குரூப் இன்சூரன்ஸ் 5 லட்சம் மருத்துவ காப்பீடு முதலியன வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜிடிஎஸ் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்த வித நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.