சென்னை, ஜன. 30 - பேருந்து நிறுத்தங்களில் விளம்பரம் செய்ததற்காக 4 தனியார் நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 20.19 கோடி ரூபாயை மாநகராட்சி அதி காரிகள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பங்கை செலுத்தாத நிறுவனங்களை ஒப்பந்தத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன் வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 348 இ-டாய்லெட்கள் எங்கேயும் இல்லை. அதிமுக ஆட்சியில் அவற்றை முறையாக பராமரிக்காததால் சில இ-டாய்லெட்கள் சீர்குலைந்துள்ளன. இ-டாய்லெட்களின் நிலை குறித்து அடுத்த மன்றக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன், 29.33 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு திறந்தவெளி நிலத்திற்கான தொகையை செலுத்தாமல் உள்ளார். அந்த இடத்திற்கு சீல் வைக்க வேண்டும், தற்போதுள்ள நில வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் பணம் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி, “2014 ஆண்டு முதல் இ டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டது. 37 இடங்களில் சிதில மடைந்த இ-டாய்லெட்கள் சீர் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 358 இடங்களில் கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் கழிப்பறைகள் செயல்படும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர் என்றார்.