விழுப்புரம், பிப்.28- ஏப்பாக்கத்தில் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் பட்டியலின மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சார் ஆட்சியரிடம் வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மூன்று தலைமுறையாக வசித்து வரும் பட்டியலின குடும்பங்களுக்கு சாலை வசதி இல்லை. இங்கு வசிக்கும் குடும்பங்களில் 4 குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாமல் சவுக்கு தோப்பில் ஒத்தையடி வயல் வரப்பை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சவுக்குத் தோப்புக்குள் செல்வதால், ஒவ்வொரு நாளும் பாம்பு தீண்டுமோ? காட்டுப்பன்றி தாக்குமோ? என்ற அச்சத்தோடு தான் சென்று வருகின்றனர். இந்த கிராமத்தில் எவரேனும் இறந்து விட்டாலும் கூட சடலத்தை சவுக்கு தோப்பு ஒத்தையடி வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கொடுமைகள் பற்றி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், களத்தில் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அப்பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.28) திண்டிவனம் சாராட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் சதீஷ் குமார், வட்டப் பொருளாளர் பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், திருமுருகன், ஏப்பாக்கம் கிளை தலைவர் கோகுல்ராஜ், கிளை செயலாளர் ஆகாஷ் ஆகியோர் மனு கொடுத்தனர்.