சென்னை, பிப்.5- சென்னையில் 4-வது ரயில் முனையத்தை பெரம்பூர் - வில்லி வாக்கம் இடையே அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், அதை திருவள்ளூர் அருகே அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 இடங்களில் ரயில் முனையம் அமைந்துள்ளது. இந்த நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் தினசரி சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பல முக்கிய நகரங்களில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்கள் பெரம்பூர் தாண்டி உள்ளே வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. எனவே, கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சிரமமின்றி சென்னைக்கு வருவதற்கு வசதியாக வும் சில இடங்களில் புதிய ரயில் முனையம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இருப்பினும், இட நெருக்கடி மற்றும் நடைமுறை சிக்கல்கள் போன்ற காரணங்களால், அது நிறைவேறவில்லை. இதற்கிடையில், சென்னையின் 4-வது ரயில் முனையம் பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே அமைக்க ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. ரூ.428 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, “சென்னை ரயில்வே கோட்டத்தில் தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்புடன் 3 ரயில் முனைய நிலையங்கள் உள்ளன. பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையம் (பெட்டிகள் பராமரிப்புடன்) மேம்படுத்துவதற்கான பரிந்துரையை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரி வித்திருந்தார். இந்நிலையில், பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது முனையம் அமைவதற்கு திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலர் கே.பாஸ்கர் கூறியதாவது:4-வது ரயில் முனையம் சென்ட்ரலில் இருந்து 5 கி.மீ தொலைவில் பெரம்பூர் அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பூர் பகுதி முழுமையாக வளர்ச்சி அடைந்த பகுதியாகும். இங்கு போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. மேலும், காலை, மாலை அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், சாலை வழியாக புதிய முனையத்துக்கு பயணிகள் வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், விரைவு ரயில்களை சீராக இயக்குவதற் காக, மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கும் நிலை ஏற்படும். இதனால், இந்த மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கும். எனவே, புதியமுனையம் அமைப்பதை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக, திருவள்ளூர் அருகே ரயில் முனையம் அமைக்க வேண்டும். சென்னை சென்ட்ரலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் இருக்கிறது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆறு உள்ளது. இதன்காரணமாக, ரயில் நிலையத்துக்கு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் போக்குவரத்து மையமாக திருவள்ளூர் மாறும்போது, இந்த ரயில் முனையம் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கூறும்போது, “திருவள்ளூர் அருகே புதிய ரயில் முனையம் அமைக்க, திருவள்ளூர் - கடம்பத்தூர் இடையே காலி இடம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இங்கு புதிய முனையம் அமைக்கலாம். சென்னையின் ஆட்டோ மொபைல் பிரிவின் மையமான திருபெரும்புதூர், திருவள்ளூர் அருகே இருக்கிறது. இங்கு புதிய முனையம் அமைந்தால், தொழில்துறையினருக்கும், பயணிக ளுக்கும் பேருதவியாக இருக்கும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் அருகே புதிய முனையம் அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே புதிய முனையம் அமைக்க முடிவு செய்து, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவில் மாற்றம் இருக்காது" என்றனர்.