செங்கல்பட்டு, ஆக. 12- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகளை மீண்டும் அமைக்க பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு இணையாக புறநகர் பகுதியான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை தற்போது விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல வகைகளில் தொழில் சேர்ந்தவர்கள் இங்கு குடியேறி வருகிறார்கள் தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய பகுதியாக தாம்பரம் இயங்கி வருகிறது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழாக்காலங்களில் தொடர் விடுமுறை நாட்களில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ரயில் பாதைகளும் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்தல் மற்றும் முக்கிய இடங்களான பெருங்களத்தூர், பொத்தேரி, மறைமலை நகர், சிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஆறு வழி பாதையாக மாற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையில் சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், பொத்தேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஊரப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரு புறங்களிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டது. விரிவாக்கப்பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்ட இடங்களில் புதியதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அனைத்து பேருந்து நிறுத்தங்களில் பேருந்து பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயில் மற்றும் மழையில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பருவமழை துவங்க உள்ள நிலையில் உடனடியாக பேருந்து நிறுத்த நிழற்குடைகளை மீண்டும் அமைத்து தர வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.