districts

img

செஞ்சி அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

விழுப்புரம், பிப்.9- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அப்பம்பட்டில் இருந்து மணலபாடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பம்பட்டு கிராமத்தில் இருந்து ஒதியத்தூர், சின்ன பொன்னம்பூண்டி வழியாக மணலபாடி மற்றும் மழவந்தாங்கல் வரை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலையில் அரசுப் பேருந்தும் சென்று வருகிறது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் இந்த ஏரி கால்வாயில் இருந்து வெளியேறும் மழைநீர் பயிர்களை மூழ்கடித்து செல்கிறது. இதனால், பயிர்கள் சேதமடைகிறது.  இந்த ஏரி கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்குமாறு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது, இந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். ஆனால், பக்கவாட்டில் மண் சரிந்துள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் வழியாக சென்ற ஆட்டோ மற்றும் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.