வேலூர், பிப். 3 - வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலெட்சுமி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். வேலூர் சதுப்பேரியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், சதுப்பேரி, சிறுங்காஞ்சி, அகமேடு, செம்பேடு, குளத்துமேடு, பழவேரி அருந்ததியர் காலனி, கொள்ளைமேடு, தெள்ளூர், ஜமால்புரம், வெள்ளக்கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் இருந்து வேலூருக்கு வர பேருந்து வசதி இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே இப்பகுதியில் இயங்கி வந்த அரசு பேருந்தை நிறுத்திவிட்டனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க மீண்டும் இந்த வழித்தடங்களில் பேருந்துஇயக்க வேண்டும். வேலூர் அடுத்த நாயக்கனேரி பொதுமக்களும் தங்களது கிராமத்திற்கு, ஓட்டேரி வழியாக பள்ள இடையம் பட்டி, வாணியங்குளம், குளவிமேடு, தாமரைக்குளம், குப்பம்பட்டி, அரசகுளம் ஆகிய கிராமங்கள் வழியாக பகுதி நேரமாக அரசு பேருந்துகள் வந்து செல்கிறது. நிரந்தரமாக பேருந்துகள் இயக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். இதே போன்று அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கமேடு கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து குருமலை, நச்சிமேடு, மருதவள்ளிமேடு ஆகிய மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சுமார் 2கிமீ தூரத்தில் மகுட கால்வாய் கிராமத்தில் உள்ள வியாபாரிகள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் விளைவித்து தினமும் விளைபொ ருட்களை தலைச்சுமையாக தூக்கிக்கொண்டு ஏற்றி வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். எனவே வியாபாரிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மகுடகால்வாய் கிராமம் வரை பேருந்து வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும், கே.வி.குப்பம் வட்டம் ராஜாதோப்பு வரை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.