districts

மேம்பாலம் அமைக்கக் கோரி மார்ச் 23ல் உண்ணாநிலைப் போராட்டம்

விழுப்புரம், மார்ச் 7- விக்கிரவாண்டி அருகே முண்டியம் பாக்கத்தில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் - ஒரத்தூர்ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்தும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, அங்கு மேம்பாலம் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர்.  முண்டியம்பாக்கம் சிபிஎம் கிளை சார்பில் இந்த கோரிக்கையை வலி யுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அத்துடன் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலாளர் ஆகி யோருக்கும் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை யிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினர். இந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்துக்கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் முண்டியம்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.  வருகிற 23 ஆம் தேதி அனைத்து கட்சி சார்பில் உண்ணாநிலை, கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் வி. கிருஷ்ணராஜ், திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபால், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் கோபால கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேணுகா ராஜவேல், பாமக நிர்வாகி கங்காதரன் மற்றும் காங்கிரஸ், விசிக,பாஜக, அமமுக ஆகிய கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.