விழுப்புரம், நவ.11- விழுப்புரம் மாவட்டம், கோட்டாம்பூண்டி ஊராட்சிக் குட்பட்ட ரோடு பாளையத்தில் பேருந்து நின்று செல்ல நட வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட கோட்டாம்பூண்டி ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்டது ரோடு பாளையம் கிராமம், இக்கிராமத்தின் வழியாக திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அவலூர்பேட்டை,சேத்பட் வழி செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. ஆனால் கிராம மக்கள் வெளியூருக்கு செல்ல பேருந்துகள் கைகாட்டி நிறுத்தினால் பேருந்துகள் நிறுத்தாமல் செல்லுகின்றனர். இதனால் இப்பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தினந்தோறும் பேருந்து நின்று செல்லாததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.