மதுரை, ஜூலை 21- மதுரை, தென்மாவட்டங்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை குறித்த அறிக்கையை சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது “எக்ஸ்” சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு தலைவர் ஶ்ரீவத்ஸ்ராம், மதுரை மண்டலத்தலைவர் சுந்தர் கண்ணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவைகள் குறித்த அறிக்கையை அளித்தனர். “ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டு காலத்தில் உள்கட்டமைப்புகளுக்கான முதலீட்டை, வட மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டிற்கு பெருமளவு குறைத்துவிட்டது. நாம் கடுமையான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நகரமயமாக்கல் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது எல்லாவகையிலும், வாய்ப்பிலும் அதிக பெரு நகரங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. எனவே உள்கட்டமைப்பிற்கான முதலீடு மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம். உதாரணமாக வாரணாசி விமானநிலையத்திற்கு சுரங்கபாதை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்குகிற ஒன்றிய அரசு, அதைவிட பலமடங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயணிக்கிற மதுரை விமான நிலையத்தில் கூடுதல் தொழில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க, ரூ.30 கோடி செலவாகும் என்கிற காரணத்தால் அனுமதி தர மறுக்கிறது. இந்த நிலையிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை பெற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தொடர்ந்து முயற்சிப்போம்” என்பதை அவர்களிடம் தெரிவித்தேன்.