மாமல்லபுரம்,மே 27-
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்தில் எடை இயந்திரம், அடிக்கடி பழுதடைந்து போவதால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை அரசு எடைபோட்டு வாங்குவதில் காலதாமதம் ஆகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நெல் கொள்முதல் களத்திற்கு வரும் விவசாயிகள் அங்கு நாள்கணக்கில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் பழைய எடை இயந்திரமே உள்ளது. எடைபோட காலதாமதம் ஆவதால் விவசாயிகள் தங்கள் நெல்களை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பழைய மிஷின்களை அகற்றி புதிய டிஜிட்டல் மிஷின் வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.