கள்ளக்குறிச்சி,ஜூன் 17-
சேலம்-சென்னை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் வருகிற 28 ஆம் தேதி அகற்றப்படும் என்று நெடுங்சாலைத்துறை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதில் வருகின்ற 28 ஆம் தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.