districts

img

பால் கொள்முதல் செய்ய மறுப்பு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

ராணிப்பேட்டை, ஜன. 17 –  ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், ஆயிலாம்மேடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டுறவு சங்கப் பணியாளர் ஆ. பழனி சுற்றியுள்ள கிராமங்கள் சென்று பால் கறவை செய்து தினமும் கொடைக்கல் ஆவின் பால் பண்ணையில் கொடுத்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக கொடைக்கல் பால் பண்ணை பொறுப்பாளர் மனோகர் பால் வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடைக்கல் உதவி மேலாளர் லிடியா, அலுவலக செயலாளர் நாகராஜி டம் முறையிட்டும் கண்டும் காணாமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஆவின் மாவட்ட பொறுப்பாளர் கோபி யிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளார். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பழனிக்கு தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை நேரில் சென்று குறைகளை தெரிவித்துள்ளார். அமைச்சர், கீழ் உள்ள அதிகாரிகள் சென்று பார்க்கும்படி அலட்சியப் போக்கில், கொச்சைப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு, 40 லிட்டர் பால் கேன்களுடன் உண்ணாநிலை போராட்டம் துவக்கினர். தகவல் அறிந்து ராணிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் கோபியிடம் காவல் உதவி ஆய்வாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனை தொடர்பாக பேசினார். இறுதியாக பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக சக அதிகாரிகளுடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.