சிதம்பரம், நவ.17- கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சோழதரம் கடை வீதியில் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடம் திருமுட்டம். இங்கிருந்து செல்லும் சாலையில் பட்டேல் என்கிற தனியார் நிறுவனம் ஏராளமான லாரிகளில் தினமும் மண்ணை ஏற்றிச் செல்கிறது. இதனால் 5 இடங்களில் ஏற்பட்டிருக்கும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிப்பதால், இருசக்கர வாகனம் கூட செல்ல முடியவில்லை. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோழதரம்-திருமுட்டம் சாலை மெயின் ரோட்டில் மரக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. காட்டுமன்னார்குடி வட்டக் குழு உறுப்பினர் வெற்றி வீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் தினேஷ் பாபு, வட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், தேவேந்திரன் , கிளைச் செயலாளர்கள் நமச்சிவாயம், காசிராஜன், சண்முகம் வாலிபர் சங்க வட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.