தருவள்ளூர், அக் 16- தனியார் கம்பெனிகள் வரவு கால்வாயை ஆக்கிரமித்துள்ளதால், பொன்னேரி அருகில் உள்ள இலவம்பேடு கிராமத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் பலத்த மழையால் அங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.கும்மிடிப்பூண்டியில், பஜார் , பேரூராட்சியில் நரிக்குறவர் குடியிருப்பு, ஆரம்பாக்கம் ஜீவா நகர், மீனவர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொன்னேரியை அடுத்த இலவம்பேடு கிராமத்தில் வரவு கால்வாய்களை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்து உள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் வட்டாட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், மழைநீர் வெளியேற வடிகால் இல்லாததால், இலவம்பேடு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொன்னேரி வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் ஜேசிபி மூலம் கால்வாய் அடைப்பை அகற்றி வருகின்றனர். பொன்னேரி நகராட்சி அருகில் உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியிலும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மழைநீர் வெளியேற வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. கால்வாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாகக் அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.