சென்னை, செப். 29 - புஷ்பா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பழுது பார்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி 14வது பகுதி மாநாடு ஞாயிறன்று (செப்.29) சூளைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், நமச்சிவாயபுரத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை திறக்க வேண்டும். கூவம் கரையோரம் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். 113வது வட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதை தடுக்க உந்துவிசை நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை முன்னாள் பகுதிச் செயலாளர் ஆர்.அம்பிகாபதி ஏற்றினார். புஷ்பா நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவுச் சுடர்களை பகுதிக்குழு உறுப்பினர்கள் அ.இரணியன், டி.சுரேந்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பகுதிக்குழு உறுப்பினர்களான பி.ஏழுமலை வரவேற்க, பி.வெங்கடேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் துவக்கவுரையாற்றினார். வேலை, அமைப்பு அறிக்கையை வெ.இரவீந்திர பாரதியும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ராஜ்குமாரும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், கே.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார் நன்றி கூறினார். 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக வெ.இரவீந்திர பாரதி தேர்வு செய்யப்பட்டார்.