புதுச்சேரி,டிச.3- மிக்ஜம் புயலை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள மாநில அவசரகால மையம் மற்றும் தொடர்புடைய துறைகளின் சார்பில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றது. இதனிடையே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாநில அவசரகால மையத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனமழை மற்றும் சூறாவளியை எதிர்கொள்வதற்காக துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன் தலைமை செயலாளரிடம் விளக்கிக் கூறினார்.