districts

img

“ஜனநாயகத்தின் தாய்” இந்தியா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி,ஜன.25-  அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் உன்னத நாளே குடியரசு நாள் என்று முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.  அவர் மேலும் கூறியிருப்பதாவது:- நமது அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் உன்னத நாளாக குடியரசு தினம் விளங்குகிறது. வலிமையான ஜனநாயக அமைப்பை நாம் கொண்டிருப்பதன் காரணமாக இந்தியா, “ஜனநாயகத்தின் தாய்” என்று அழைக்கப்படுகிறது. நமது தேசத்தின் ஆன்மாவாக விளங்கக்கூடிய அரசியலமைப்பை வடிவமைப்பதில் பங்களித்த விடுதலைப் போராட்ட வீரர்கள். சட்டம் இயற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். நமது அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நினைவுபடுத்தும் இந்தக் குடியரசு நாளில் திரும்பி பார்க்கையில் நமது தேசம் வளர்ச்சியடைந்த தேசமாக முன்னேறி இருப்பதைக் காண முடிகிறது. அதேபோல், “மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசு என்னும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தைப் பின்பற்றி, எனது அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதன் வாயிலாக புதுச்சேரி மாநிலம் பல நிலைகளில் வளர்ந்திருப்பதையும் சொன்னதைச் செய்யும் அரசாக எனது அரசு விளங்கி வருவதையும் மக்களின் கூற்றிலிருந்து கண்கூடாகப் பார்க்க முடிகிறது. புதுச்சேரி மாநிலத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பல முன்னோடித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த மக்கள் அனைவரும் நல்லாதரவைத் தொடர்ந்து அரசுக்கு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.