விழுப்புரம், ஜூன் 14-
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அய்யனார் குளத்தெரு மேற்கு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர் வாரப்படாததால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குளம் போல் சாலையில் தேங்கி நிற்கிறது.
இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள், வியாபாரிகள் எம்.ஜி. சாலை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் கழிவு நீர் தேங்கி நிற்பதால் திருவிக சாலை, காமராஜர் சாலை வழியாக சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் திருவிக சாலை, காமராஜர் சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.