சென்னை,ஜூன் 6-
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை சந்திப்பு பகுதியை சீரமைக்க போக்கு வரத்து காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் உழைப்பாளர் சிலை முன்பு நின்று படம் எடுத்து கொள்வதும் சிக்னல் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் கூட்டமாக ரோட்டை கடப்பதும் உண்டு. இதனால் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் சிரமப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன. எனவே விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பான பாதசாரிகள் பயணத்துக்காகவும் உழைப்பாளர் சிலை சந்திப்பை சீரமைக்க போக்குவரத்து காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்த சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் சாலையை கடப்பது, சிக்னல்கள் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது குறைந்தபட்சம் ஒரு நாளில் 10 ஆயிரம் பாதசாரிகள் உழைப்பாளர் சிலை சந்திப்பை கடந்த செல்வது தெரிய வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
வாகனங்களின் சீரான போக்குவரத்துக்காக சென்டர் மீடியன்கள் சீரமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் தூரத்துக்கு அமைக்கப்படும். இந்த சந்திப்பின் தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு சென்டர் மீடியன் வைக்கப்படுகிறது. இந்த மாற்றங்களினால் பாதசாரிகள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க பிரத்யேகமான கிராசிங் லேன் அமைக்கப்படுகிறது. மேலும் ரோட்டை கடக்கும்போது சிக்னலுக்காக பாதுகாப்பாக காத்திருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படும். சரியான நிறுத்த கோடுகள், திசை காட்டும் குறியீடுகள் பளிச்சென்று தெரியும் வகையில் வண்ணம் பூசப்படும். அனைத்து வயதினரும் எளிதாக கடந்து செல்லும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்வு பாதைகளும் அமைகிறது. அமல்படுத்தப்போகும் இந்த புதிய சீரமைப்பு வசதிகள் 3 முதல் 5 வாரங்கள் வரை சோதனைமுறையில் கண்காணிக்கப்படும். அதன் பிறகு நிரந்தர மாற்றம் செய்யப்படும். போக்குவரத்து மட்டுமல்லாமல் முக்கிய சந்திப்பு என்பதால் நேர்த்தியாகவும் அழகாகவும் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.