districts

img

வறண்டு வரும் வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

சிதம்பரம், மே 31- வீராணம் ஏரி வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த ஏரியை சுற்றி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை வெப்பம் காரணமாக தற்போது வீராணம் ஏரி வறண்டு வருகிறது. புதன்கிழமை (மே 31) காலை 6 மணி நிலவரப்படி வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லாமல், அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து காவிரியில் தண்ணீர் வந்தால்தான் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரும். ஏரி வறண்டு வருவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகம் வரத் தொடங்கியுள்ளன. வீராணம் ஏரி வறண்டு வருவதால் அப்பகுதி விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

;