செங்கல்பட்டு, ஜன.6- மறைந்த மூத்த தோழர் மா.ச.முனுசாமி குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் குடும்ப நலநிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரான மா. ச.முனுசாமி கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தோழர் மா.ச.முனு சாமியின் நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட கிளையின் சார்பில் செங்கல்பட்டில் மாவட்டத் தலைவர் ந.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மா.ச.முனுசாமி படத்தை கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் திறந்து வைத்தார். கூட்டணியின் சார்பில் குடும்ப நலநிதி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டேவிட் ராஜன், தோழர் மா. ச.முனுசாமியின் இணையர் ராணியி டம் வழங்கினார். இந்நிகழ்வில் கூட்டணியின் முன்னாள் மாநில பொருளாளர் மத்தேயு, முன்னாள் மாநில துணைத்தலைவர் அலோசியஸ் துரைராஜ், மாநிலத் துணைத் தலைவர் பிரசன்னா, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் கூட்டணி நிர்வாகிகள் வேம்புலி அம்மாள், தீனதயாளன், முருகன், கருணா கரன், சாம்ராஜ், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் நினைவேந்தல் உரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுராந்தகம் வட்டக்கிளையின் சார்பில் மதுராந்தகம் வட்டார கல்வி அலுவலகத்தில் நிறுவப் பட்டுள்ள முனுசாமியின் நினைவு கல்வெட்டை கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் திறந்து வைத்தார்.