districts

அரசின் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன் பதிவு ஆட்சியர்

விழுப்புரம், ஜூன் 21-

    அரசு திட்டப் பயன்களை பெற உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021- 2022 ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2023-24) விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 139 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   வேளாண்மை - உழவர் நலத்துறையில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும் உழவன் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறைகளின் திட்டப் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

    விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் விதைகள், உயிர் உரங்கள், விசைத்தெளிப்பான்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். உழவன் செயலியினை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து திட்டப்பலனை பெற்றுக்கொள்ளலாம்.

  இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.