இ ந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில 24-வது மாநாடு 2025 ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. கட்சி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக விளங்கும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்க கட்சித் தோழர்களும் பொதுமக்களும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தின் சமூக-பொருளாதார நிலை வங்கக் கடலோரம் 3,725 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள விழுப்புரம், பெரும்பாலும் கிராமப்புற மாவட்டமாகவே உள்ளது. மூன்று நகராட்சிகளும் ஏழு பேரூராட்சிகளும் இருந்தபோதிலும், 2010-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த குடிசைகளில் 11 விழுக்காடு இம்மாவட்டத்தில் இருந்தது. கல்வி நிலையிலும் தனிநபர் வருமானத்திலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தொழில் வளர்ச்சியின் தேக்கம் 1993-இல் உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2019-இல் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சென்னை-செங்கல்பட்டுக்கு அருகாமையிலும், சிறந்த போக்குவரத்து இணைப்புகளும் இருந்தபோதிலும், 31 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. சாதிய சக்திகளின் மோதல்கள் காரணமாக தொழில் முதலீடுகள் தயக்கம் காட்டுகின்றன. இதனால் இளைஞர்கள் சென்னை, திருப்பூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
மக்கள் ஒற்றுமைக்கான போராட்டங்கள்
சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது: - நல்லாவூரில் ராமகிருஷ்ணன் தோழரின் தியாகம் - கரசானூரில் தலித் மக்களின் புளி மகசூல் உரிமை மீட்பு - கொஞ்சிமங்கலத்தில் பறையடித்த தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு நீதி - திருவக்கரையில் தொழிலாளி மீதான கொடூரத்துக்கு தண்டனை நில உரிமைப் போராட்டங்கள் எடச்சேரி கழுவெளியில் முறைகேடான பட்டா வழங்கலை எதிர்த்தும், பொம்மையார் பாளையத்தில் 376 ஏக்கர் அனாதீன நிலங்களை மீட்கவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இரும்பை கிராமத்தில் 22 பழங்குடி குடும்பங்களுக்கு வீட்டுமனை மற்றும் தொகுப்பு வீடுகள் பெற்றுத்தரப்பட்டன.
தொழிலாளர் நலன்
விழுப்புரம் மாவட்டம் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். மேலும், கிராமப்புற உறுதியளிப்பு வேலைத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரியும் மாவட்டமாகவும் திகழ்கிறது. திருவக்கரையில் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு பல பத்தாண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு வீட்டுமனை உரிமை பெற்றுத்தரப்பட்டது இக்கட்சியின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். கனிம வளப்பாதுகாப்பு, பொதுநலப் போராட்டங்கள் 2008-இல் திருவக்கரை ப்ளூ மெட்டல் குவாரி ஏல முறைகேட்டை எதிர்த்து வெற்றிகரமான சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து கரசானூர், கிளியனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிர்கால இலக்கு “எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்ற சேகுவேராவின் வார்த்தைகளை செயல்படுத்தும் வகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முன்னின்று போராடும் மார்க்சிஸ்ட் கட்சி, இந்த விழுப்புரம் மாநாட்டிற்குப் பின் தமிழகம் முழுவதும் புதிய வரலாறு படைக்கும்.