districts

img

இறந்துவிட்டதாக கருதப்பட்ட விஷச்சாராய வியாபாரி 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கடலூர், நவ.6- பண்ருட்டி அருகே விஷச் சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட குற்றவாளியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம், ஒறையூர், அங்குச் செட்டிபாளையம்  பகுதியில்  கடந்த 2001 ஆம் ஆண்டு விற்பனை செய்த சாராயத்தை குடித்த 60 க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவர்கள் பரிசோதனையில் இவர்கள் அருந்தியது விஷச்சாராயம் என்று உறுதி செய்யப்பட்டது.  இதில்  சிகிச்சை பலனின்றி  53 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கண் பாதிப்பு ஏற்பட்டும் காது கேட்காமலும் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார்  தனித்தனியாக மூன்று இடங்களில் இந்த சம்பவம் குறித்து விஷச்சாராய  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 27 பேர் மீது  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.  வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலை யில் பல வருடங்கள் கடந்ததால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்தில்  இருந்து வருவதால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் சம்பந்தப்பட்ட  5 பேரின் முகவரிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மூன்று பேருடைய இறப்புச் சான்றிதழ் கிடைத்த நிலையில்  மேலும் இருவர் இறப்பு குறித்து  தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மூன்று வழக்கிலும்  தொடர்புடைய 9 வது குற்றவாளியான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்டு (எ) தோஜா ஆனந்த் (வயது-58) என்பவரை தேடி தூத்துக்குடிக்கு  காவல்துறையினர் சென்றனர். அவர் உயிரிழந்து விட்டதாக கருதிய நிலையில்   தோஜா ஆனந்த் திருப்பூரில் குடும்பத்துடன்  உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் விரைந்து சென்ற போலீசார் ஜேம்ஸ் பாண்டு (எ) தோஜா ஆனந்தை கைது செய்து புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இறந்துவிட்டதாக கூறப்பட்ட விஷ சாராய கொலை குற்றவாளி 23 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.