சென்னை,ஜூலை 24-
சென்னையின் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்து தடுமாறுவதும் பொது மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தொழில் நகரமான அம்பத்தூரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகள் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி பல்லாங்குழியை போல் மாறி வருகிறது. சாலைகள் சிதிலமடைந்து விண்வெளி நிலப்பரப்பு போல் காட்சி அளிக்கிறது.
கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டர வாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை உள்ளிட்ட சாலைகள் மோசமாக காட்சி அளிக்கின்றன. சைக்கிள்களிலும் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் கடுமையாக பாதிக்கின்றனர்.
கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ குடிநீர் வாரிய பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்க வில்லை. சில இடங்களில் பள்ளத்தை நிரப்புவதற்கு மண் கூட இல்லை என்ற அவலம் நீடிக்கிறது.
திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகி றது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் குறுக்கு சந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி பரிதாப நிலையும் உள்ளது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரயில் பணிகள் ஏற்கெனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்கு தோண்டப்பட்டதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மெட்ரோ பணி...
பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசரவாக்கம் பகுதிகளில் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதேநேரம் வளசரவாக்கம், மேட்டுக் குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப் படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.
மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருப வர்கள் விபத்துக்களில் சிக்கி தவிக்கின்ற னர்.
ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைகளை அமைத்து கொடுப்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என சமூக செயல்பாட் டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.